பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை: 30 முதல் 40க்கு கிடைக்கும்

சென்னை: பண்ணை பசுமை காய்கறி கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40க்கு இன்று முதல் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் உணவு துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்திட முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து, 4.11.2019 மற்றும் 6.11.2019 ஆகிய தினங்களில் கூட்டுறவு மற்றும் உணவு துறையின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  

இதன் தொடர்ச்சியாக, கூட்டுறவு மற்றும் உணவு துறையின் மூலம் தரமான வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, நுகர்வோர் பயன்பெறும் வகையில், வெளிச்சந்தை விலையை விட குறைவாக, ஒரு கிலோ ரூ.30 மற்றும் ரூ.40க்கு தமிழ்நாட்டில் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக இன்று முதல் விற்பனை செய்யப்படும். அரசின் இந்த நடவடிக்கையினால் வெங்காயத்தின் விலை உயர்வானது கட்டுக்குள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளனர்.

Related Stories: