சென்னை: தேசிய ரயில்வே வாலிபால் தொடரின் லீக் ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி 3-0 என்ற நேர் செட்களில் ரயில்வே பாதுகாப்பு படை அணியை வீழ்த்தியது. ஐசிஎப் விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 21 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் போட்டியில் வாரணாசி டீசல் லோகோ பணிமனை - தென்கிழக்கு மத்திய ரயில்வே அணிகள் மோதின. இதில் 3-0 என்ற நேர் செட்களில் டீசல் லோகோ பணிமனை அணி வெற்றி பெற்றது.
கவுகாத்தி வடக்கு பிராந்திய ரயில்வே 3-1 என்ற செட் கணக்கில் மும்பை மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது. அடுத்து நடைபெற்ற போட்டியில் தெற்கு ரயில்வே- ரயில்வே பாதுகாப்பு படை அணிகள் களம் கண்டன. இதில் 3-0 என்ற நேர் செட்களில் தெற்கு ரயில்வே அணி எளிதாக வென்றது. வடக்கு ரயில்வே - கிழக்கு மத்திய ரயில்வே மோதிய போட்டியில் வடக்கு ரயில்வே 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. தென் மத்திய ரயில்வே அணி 3-0 என்ற செட் கணக்கில் தென் மேற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.