திருவனந்தபுரம்: சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 37 ரன் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தியது. கேரள மாநிலம் தும்பாவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராபின் உத்தப்பா தலைமையிலான கேரள அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தமிழக அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் ஒரு ரன்னிலும், ஜெகதீசன் 8 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக் இணை பொறுப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அபராஜித் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். அப்போது அவர் 26 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 35 ரன் எடுத்திருந்தார். அடுத்த சிலநிமிடங்களில் 33 ரன் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக்கை ரன் அவுட் செய்தார் ராபின் உத்தப்பா. அடுத்து வந்த விஜய்சங்கர் 18 பந்துகளில் 25 ரன், ஷாருக்கான் 18 பந்துகளில் 28 ரன் எடுக்க அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. கடைசி நேரத்தில் முகமது அதிரடியாக விளையாட தமிழ்நாடு 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. முகமது 11 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 34 ரன், முருகன் அஸ்வின் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேரளா தரப்பில் பாசில் தம்பி 3, கே.எம்.ஆசிப் 1 விக்கெட் வீழ்த்தினர்.