×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதியோர் மாடிப்படி ஏறுவதற்கு தானியங்கி நகரும் நாற்காலி

* ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைத்துள்ளதாக பயணிகள் புலம்பல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஒடிசா, பீகார் போன்ற பகுதிகளுக்கும், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களுக்கும் தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், தூங்குவதற்கு வசதி, கழிப்பறை வசதி போன்றவை இருப்பதால் இரண்டு, மூன்று நாட்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கும் என்பதால் பெரும்பாலானோர்  ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சாதாரண நாட்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளும், பண்டிகை காலங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரும் பயணம் செய்கின்றனர். இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதியோருக்காக நவீன தானியங்கி நாற்காலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.20 முதல் ரூ.50 ஆயிரம் வரையில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், வயதானவர்கள் படிக்கட்டில் ஏறி இறங்க சிரமப்படுவதால், அவர்களுக்காக இந்த நவீன நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதலாவது மாடியில் உள்ள பயணிகள் காத்திருப்போர் அறைக்கு அருகில் உள்ள படிக்கட்டில் அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டில் ஏற அல்லது இறங்க சிரமப்படும் முதியவர்கள் இந்த நாற்காலியில் உட்கார்ந்து, சீட் பெல்ட் மாட்டிய பிறகு, அதில் இருக்கும் ஸ்விட்ச்சை ஆன் செய்ய வேண்டும். அந்த நாற்காலி மெதுவாக கீழிருந்து மேலாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ இயங்கும். மேலும், அடுத்த கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையங்களில் உள்ள அனைத்து படிக்கட்டுகளிலும் இதுபோன்று நாற்காலி அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வயதான பயணிகள் கூறுகையில், ‘‘இந்த வசதி எங்களை போல் முதியோர்களுக்கு உதவியாக உள்ளது. இங்கு லிப்ட் வசதி இருந்தாலும், இது போன்ற புதிய வசதிகளுடன்கூடிய நாற்காலியில் செல்வது ஆர்வமாக உள்ளது. ஆனால் இந்த தானியங்கி நாற்காலி பயணிகள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது. ரயில் நிலையத்திற்குள் ஏதோ ஒரு ஓரத்தில் அமைத்திருப்பதால் இதுகுறித்து எந்த பயணிக்கும் தெரியவில்லை. இந்த தானியங்கி நாற்காலியை பயணிகள் அதிகம் உள்ள இடங்கள் அல்லது லிப்ட் அருகே உள்ள படிக்கட்டில் வைத்தால் நன்றாக இருக்கும். இந்த நவீன நாற்காலியை பயணிகள் அவர்களாகவே இயக்குவது சிரமம். எனவே, அதற்கென ஒரு ஊழியர் நியமிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : climbers ,Central Railway Station ,chair , Automatic moving chair , elderly climbers,Central Railway Station
× RELATED கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக...