சென்னை: சென்னை அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் பாலிடெக்னிக் மாணவன் முகேஷ் (19) என்பவரை, அவரது நண்பர் விஜய் என்பவர் கடந்த 4ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 6ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் சரணடைந்தார்.இதைதொடர்ந்து, விஜயை போலீஸ் காவலில் விசாரிக்க கேட்டு நேற்று தாழம்பூர் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனு இரவு 7 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் விஜயை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். இதற்கு விஜய் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது நீதிமன்றத்தில் நின்றிருந்த விஜய் தனது தாய், சகோதரர்கள், அண்ணி, உறவினர்களை போலீசார் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், புழல் சிறையில் இருந்து வரும்போது செல்போன் மூலம் தனது தாய் கதறி அழுததாகவும் தெரிவித்தார். மேலும் துப்பாக்கி குறித்த தகவல்களை கூறும்படி போலீசார் கட்டாயப்படுத்துகிறார்கள். என்னை போலீஸ் காவலுக்கு அனுப்பினால், அவர்கள் அடித்து துன்புறுத்துவார்கள் என்றார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி காயத்ரிதேவி, இதுபற்றி எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தரும்படி கூறினார். இதையடுத்து உடனடியாக அவர், ஒரு மனுவாக மேற்கூறியபடி எழுதி நீதிபதியிடம் கொடுத்தார். பின்னர், 3 நாட்கள் மட்டும் விஜயை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.