சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கம், சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ஆகியோர் சார்பில் நேற்று காலை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் முறையிடப்பட்டது. நடிகர் சங்கம் தொடர்பான வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் நிலுவையில் இருப்பதால் அந்த நீதிபதியே இந்த வழக்கையும் விசாரிப்பார் என்று நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்தார்.இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்கம் சார்பில் மூத்த வக்கீல் ஓம்.பிரகாஷ், வக்கீல் கிருஷ்ணா ரவீந்திரன், நடிகர் கார்த்தி சார்பில் வக்கீல் செங்கோட்டுவேல் ஆகியோர் ஆஜராகி, தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்தது சட்ட விரோதம். தனி அதிகாரி நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.