சென்னை: கோயம்பேட்டில் இருந்து குமுளிக்கு புறப்பட்ட தனியார் ஆம்னி பஸ், மறைமலைநகர் அருகே நள்ளிரவில் குபீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களது உடமைகள் எரிந்து நாசமானது. சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் குமுளிக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. தாம்பரத்தை சேர்ந்த சிக்கந்தர் (50) பஸ்சை ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவரான தேனியை சேர்ந்த ஆனந்தன் (35) என்பவரும் முன்பகுதியில் அமர்ந்திருந்தார். பஸ்சில், கண்டக்டர், டிரைவர் உட்பட 38 பயணிகள் இருந்தனர். நள்ளிரவு என்பதால், பலர் தூங்கிவிட்டனர். பஸ் 12.30 மணியளவில் கூடுவாஞ்சேரி அருகே சென்றபோது, இன்ஜினில் இருந்து திடீரென குபுகுபுவென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சிக்கந்தர், பஸ்சை மெதுவாக இயக்கினார். சிறிதுநேரத்தில், தீப்பிடிக்க ஆம்பித்தது. உடனே அவர், காட்டாங்கொளத்தூர் அருகே சாலையோரம் பஸ்சை நிறுத்தினார். பின்னர் பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக கீழே இறங்கும்படி கூறினார். தூக்கத்தில் இருந்தவர்கள் என்னவென்றே தெரியாமல் அலறியடித்து கீழே இறங்கினர்.