இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.50 கோடி மோசடி செய்த 2 பேர் கைது

விழுப்புரம்: இரட்டிப்பு பணம் தருவதாக கூறி விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.50  கோடி வரை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம்  மாவட்டம் சின்னசேலத்தில் மூங்கில்பாடி சாலையில் நாகுப்பம் கிராமத்தை சேர்ந்த  வெங்கடேசன்(31), கள்ளக்குறிச்சி ஈரியூரை சேர்ந்த அழகேசன்(30),  செந்தில்குமார்(45), தெங்கியாநத்தத்தை சேர்ந்த செல்வம்(40), சின்னசேலம்  வேலாயுதம்(43), சங்கராபுரம் பூட்டை கிராமத்தை சேர்ந்த  சுரேஷ்கண்ணா(41) ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்கள் 6 பேரும் சேர்ந்து  சின்னசேலம் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம்  சென்று, தங்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கினால் 10 வாரங்கள் முடிவில்  அந்த தொகைக்கு இரட்டிப்பு தொகை தருவதாக தெரிவித்துள்ளனர். இதையொட்டி  அவர்கள் 37 முகவர்களை உறுப்பினர்களாக சேர்த்து, அவர்கள் மூலம் மக்களிடம்  பணம் வசூலித்துள்ளனர். இந்நிலையில் 10 வாரங்களில் தங்களுக்கு  இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என நம்பி, ஒவ்வொருவரும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1  லட்சம் வரை பணம் கட்டினர். பத்து வாரங்கள் கழித்த பின்னர், அந்த  நிறுவனத்தார், சம்பந்தப்பட்ட மக்களுக்கு இரட்டிப்பு தொகையை தரவில்லை.

இதையடுத்து  பணத்தை கட்டிய மக்கள் அந்த நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது,  வெங்கடேசன் உள்ளிட்ட 6 பேரும் அந்த நிறுவனத்தை பூட்டி விட்டு தலைமறைவாகி  விட்டனர். இதனால் பணத்தை கட்டியவர்கள் அதிர்ச்சியடைந்து எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர். இந்த மனுவை மாவட்ட குற்றப்பிரிவு  போலீசாருக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி உத்தரவிட்டார்.  இதையடுத்து, குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் பூங்கோதை,  சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசிங்கம், நேவிஸ் அந்தோணிரோசி, குமார், சுப்பையா  ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில், வெங்கடேசன்  உள்பட 6 பேரும் சேர்ந்து முகவர்கள் மூலம், சின்னசேலம் மற்றும்  சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 2 ஆயிரம் பேரிடம், இருந்து ரூ.50  கோடி வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், வெங்கடேசன்,  சுரேஷ்கண்ணா ஆகியோர் நேற்று வெளியூருக்கு தப்பி செல்வதற்காக மாடூர் டோல்கேட் அருகே  காரில் சென்று கொண்டிருப்பதாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல்  வந்தது. இதையடுத்து, இது பற்றி கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதனுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டு, அவரும் மற்றும் சின்னசேலம் போலீசார் உதவியோடு  வெங்கடேசன், சுரேஷ்கண்ணா ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மடக்கி  பிடித்து கைது செய்தனர். மேலும், கார் மற்றும் ரூ.3 லட்சம் பணத்தையும்  பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி  குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் அவர்களை ஆஜர்படுத்தி  விழுப்புரம் அருகே வேடம்பட்டில் உள்ள சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும்,  இந்த பண மோசடியில் தொடர்புள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: