சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாட்கள் ஆகிறது என்று, நடிகர் ரஜினிகாந்துக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல, எனக்கும் பா.ஜ.க. சாயம் பூச முயற்சிகள் நடைபெறுகிறது நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டினார். இதில் நானும், திருவள்ளுவரும் சிக்க மாட்டோம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இக்கருத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், எப்போதும் வெளிப்படையாக தான் பேசுகிறேன் என்றும், தமிழக அரசியலில் ஆளுமையான, சரியான தலைமைக்கு தற்போதும் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது எனவும் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்து துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.