வீட்டில் திருடியபோது பொதுமக்கள் திரண்டதால்1.5 லட்சம் பைக்கை போட்டுவிட்டு கொள்ளையன் ஓட்டம்

வேளச்சேரி: தரமணியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது குடும்பத்துடன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டுக்குள புகுந்த மர்ம நபர், அங்கிருந்த ரூ.20 ஆயிரம்  மதிப்புள்ள செல்போனை திருடியுள்ளார். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த லோகநாதன், வீட்டிற்குள் ஆள் இருப்பதை பார்த்து அலறி சத்தம் போட்டார். இதனால், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் அந்த மர்ம நபர், தான் கொண்டு வந்த 1.5 லட்சம் மதிப்பிலான புத்தம் புது பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். தகவலறிந்து வந்த தரமணி போலீசார், நம்பர்  பிளேட் போடாத புதிய பைக்கை பறிமுதல் செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தப்பியோடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

* முகப்பேர் 6வது பிளாக்கை சேர்ந்தவர் அசோக்குமார் (38). நேற்று முன்தினம் இரவு இவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. அப்போது, மது போதையில் இருந்த அசோக்குமார் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிப்பட்டு  இறந்தார்.

* சேப்பாக்கம் பேகம் தெருவை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அம்பலவண்ணன் (35) என்பவரை நேற்று முன்தினம் இரவு வழிமறித்து சரமாரியாக தாக்கி விட்டு தப்பிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

* சென்னை மாநகர போக்குவரத்து கழக மந்தைவெளி பணிமனையில் நடத்துனராக பணிபுரியும் சுரேஷ் என்பவர், ேநற்று முன்தினம் திருவள்ளூர்-மந்தைவெளி இடையே இயக்கப்படும் (597 எச்) பேருந்தில் பணியில் இருந்தபோது, டிக்கெட்  வழங்கும் மிஷின் மாயமானது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

* புழல் அடுத்த கதிர்வேடு - பெரம்பூர் - செம்பியம் நெடுஞ்சாலை சூரப்பட்டு சாலை சந்திக்கும் இடத்தில், ஆட்டோவில் கத்தியுடன் திரிந்த, கொளத்தூர் நேர்மை நகர் 2வது தெருவை சேர்ந்த விக்னேஷ் (24), கொளத்தூர் சத்யசாய் நகரை சேர்ந்த  தனசேகர் (19) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

* அகமதாபாத்தில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் வந்த நவஜீவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் (23) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.

Related Stories: