புதுடெல்லி: பாரத் பெட்ரோலியதை தனியார் மயமாக்குவது பறறி குறிப்பிட்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘வர்த்தகத்தில் ஈடுபடுவது அரசின் வேலை அல்ல’’ என்றார்.பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசு தன் வசம் உள்ள சுமார் ₹60,000 கோடி மதிப்பிலான 53.29 சதவீத பங்குகள் மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் ஆகியவற்றை தனியாரிடம் விற்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மத்திய அரசின் பணி, கொள்கைகளை வகுப்பது மட்டுமே. வாடிக்கையாளர்களுக்கு மலிவான, பாதுகாப்பான எரிபொருள் கிடைக்க இது வகை செய்யும். மற்றபடி, வர்த்தகத்தில் ஈடுபடுவது மத்திய அரசின் வேலை கிடையாது.
உதாரணமாக, தொலைத்தொடர்பு துறை, சிவில் விமான போக்குவரத்து துறைகளில் தனியார் மயமானதால் போன் கட்டணங்கள், இன்டர்நெட் கட்டணங்கள் குறைந்துள்ளன. குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்கள் கிடைக்கின்றன. நிறுவனம் அல்லது தயாரிப்புதான் முக்கியமே தவிர, அதை யார் செயல்படுத்துவது என்பதல்ல’’ என்றார். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது தொடர்பாக அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.