ஒரு தமிழர் உள்பட 4 இந்திய வம்சாவளியினர் அமெரிக்க தேர்தலில் வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் முஸ்லிம் பெண் உள்பட இந்திய வம்சாவளியினர் செனட், பிரதிநிதிகள் சபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் செனட் சபைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட முன்னாள் சமுதாய கல்லூரி பேராசிரியையான முஸ்லிம் பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சியை  சேர்ந்த கஜாலா ஹாஸ்மி என்ற அந்த பேராசிரியை தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சியை சேர்ந்த கிளன் ஸ்டர்டிவன்டை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் விர்ஜினியா மாகாணத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வு  செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதேபோல் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆலோசகராக பணியாற்றிய சுகாஷ் சுப்பிரமணியம் என்பவர் விர்ஜினியா பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய அமெரிக்கர்கள் அதிகம் வாழும் லவ்டன் மற்றும்  பிரின்ஸ் வில்லியம் மாவட்டத்தில் இருந்து உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களுரை சேர்ந்த பெண்ணிற்கு மகனாக பிறந்தவர் சுகாஷ். சுகாஷின் தாயார் கடந்த 1979ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். சுகாஷ் கேபிடல் ஹேர்  பகுதியில் சுகாதாரநல உதவியாளராகவும் பணியாற்றினார். தேர்தலில் வெற்றி பெற்ற சுகாஷ் `நான் களைப்படையும் வரை விடாது பொதுமக்களுக்காக உழைப்பேன்’ என தெரிவித்துள்ளார்.இதேபோல் கலிபோர்னியாவில் சான்பிரான்சிஸ்கோ அரசு வக்கீலாக உள்ள மனோ ராஜூ மீண்டும் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ராஜூ கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர். பின்னர்  அங்குள்ள சட்டப்பள்ளியில் வழக்கறிஞர் படிப்பை முடித்தார்.இது தவிர வடக்கு கரோலினாவில் இருந்து சரோலோட்டி சிட்டி கவுன்சிலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள டிம்பிள் அஜ்மீரா என்ற பெண்ணும் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்.

Related Stories: