திருப்பத்தூர்: தமிழகத்தில் ஏரி, குளங்களை தூர்வாரியதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் தொடருகிறது. திருவள்ளுவருக்கு தனிப்பட்ட கடவுளோ, மதமோ கிடையாது. அவரை சிறுமைப்படுத்த வேண்டும் என்று சிலர் முயற்சித்து வருகின்றனர். தமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாருகிறோம் என்று அரசு சொல்கிறது. இதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கிறது. இதுதொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.