×

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை அதிமுக பொதுக்குழு 24ம் தேதி கூடுகிறது

சென்னை:அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 24ம் தேதி நடைபெறும் என்று கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு பின் கடந்த 2017 செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது, அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கே கட்சியை வழிநடத்த முழு அதிகாரம் என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் 2018ம் ஆண்டு நடத்த வேண்டிய பொதுக்குழுவை அதிமுக கூட்டவில்லை. கஜா புயல் காரணமாக அதிமுக பொதுக்குழு கூட்ட இயலாத நிலை பற்றி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வாயிலாக கட்சி தலைமை அனுப்பி வைத்தது. இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு வருகிற 24ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 24ம் தேதி (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள  வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளனர். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுக தலைமையை உற்சாகம் அடைய செய்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பும் இந்த மாதம் இறுதிக்குள் வெளியாகும்  என தெரிகிறது.  

இந்த மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தால், டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இருக்கலாம். இது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. காரணம், அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் சீட் கேட்டு அதிமுகவுக்கு இப்போதே நெருக்கடி கொடுத்து வருகின்றன. அதை சமாளிப்பது குறித்தும் வியூகம் வகுக்கப்படும் என்று தெரிகிறது. அதேபோன்று, அதிமுகவில் தற்போது இரட்டை தலைமை உள்ளது. இதற்கு சில எம்எல்ஏக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால், ஒற்றை தலைமையா, இரட்டை தலைமை தொடருமா என்பது குறித்தும் பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். சசிகலா தற்போது சிறையில் உள்ளார். அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதனால், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்தும் வருகிற 24ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

Tags : AIADMK General Committee on Local Government Election Alliance , AIADMK General Committee , Local Government Election ,Alliance meets on 24th
× RELATED கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!