வாஷிங்டன்: ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாத அமைப்பு, கடந்தாண்டு இந்தியாவில் தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த முயற்சித்து தோல்வி அடைந்ததாக அமெரிக்க நுண்ணறிவு பிரிவு குழு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட்டின் இந்திய வம்சாவளி உறுப்பினரான மேகி ஹாசன், கடந்த மாதம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்போது ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ்-கே எனப்படும் ஐஎஸ்ஐஎஸ்-கோரசான் பிரிவு அமெரிக்க ராணுவத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர்கள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் நாடு திரும்பிய அவர், ஆப்கானிஸ்தானை தவிர உலகின் வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே பிரிவுக்கு பலம் உள்ளதா? சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா அவர்களை வெற்றி பெற்ற நிலையிலும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்களா?’ என செனட் சபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு அமெரிக்க நுண்ணறிவு பிரிவு இயக்குனர் ரசல் டிராவெர்ஸ் பதில் அளித்து கூறியதாவது: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிரிவுகளிலேயே மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது ஐஎஸ்ஐஎஸ்-கே எனப்படும் ஐஎஸ்ஐஎஸ்-கோரசான் பிரிவாகும். இதில் 4,000 தீவிரவாதிகள் இருக்கக்கூடும். இந்த குழுவானது இந்தியாவில் கடந்த ஆண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.