வாஷிங்டன்: பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக 188 நாடுகள் ஒன்றிணைந்து பாரிஸ் ஒப்பந்தத்தை உருவாக்கின. இதன்படி, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி, அனல்மின் நிலையங்களை ஒட்டு மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் இணைந்தது. ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பின்னுக்கு தள்ளுவதற்காக மேற்கொள்ளப்படும் சர்வதேச சதி என இந்த ஒப்பந்தத்தை அவர் விமர்சித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.