திருவொற்றியூர்: மணலி நெடுஞ்செழியன் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்திற்கு உள்ளாகின்றனர். மணலி மண்டலம் 18வது வார்டுக்குட்பட்ட நெடுஞ்செழியன் சாலையில் குடிநீர் லாரி, கார், மோட்டார் பைக் என தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்குள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகம் எதிரே நெடுஞ்செழியன் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதன் மீது வாகனங்களை செலுத்தும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.