சொத்துவரி தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண 23 பேர் கொண்ட குழு அமைப்பு: மாநகராட்சி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக சொத்துவரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் புதிய சொத்து வரியானது தாங்கள் செலுத்தி வரும் பழைய சொத்துவரியை விட அதிகமாக உள்ளதாக பொது மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் முறையாக கணக்கீடு செய்யாமல் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட சொத்துவரியை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். எனவே, உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இந்நிலையில் சொத்துவரி தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண 23 பேர் கொண்ட குழுவை அமைத்து ெசன்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உயர் நீதிமன்ற உத்தரவின் படி சொத்துவரி உயர்த்தப்பட்டது. இந்த சொத்துவரி மிகவும் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களின் சொத்துவரியை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் சொத்துவரி தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண சென்னை மாநகராட்சி குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த குழுவில் மொத்தம் 23 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழு புதிய சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்தவர்களின் மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய முடிவு எடுக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் சொத்துவரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பாகவும் முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

1350 கோடி இலக்கு

2019-20ம் நிதியாண்டிற்கான முதல் அரையாண்டில் சென்னை மாநகராட்சி 602 கோடி சொத்துவரி வசூல் செய்துள்ளது. மேலும் தொழில்வரியாக  200 கோடி வசூல் செய்யப்பட்டு நடப்பு நிதியாண்டில் சொத்து வரி 1350 கோடியும், தொழில் வரி 500 கோடியும் வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: