குற்றவாளிகளை பிடிக்க கோவா சென்றபோது ரயிலில் எஸ்ஐ திடீர் மரணம்: போலீஸ் விசாரணை

சென்னை: நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜாமணி (57). சென்னை, அன்னை சத்யா நகரில் தங்கி, மவுன்ட் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் குற்றவாளியை பிடிக்க ஆய்வாளர் சுரேஷ் மற்றும் 4 போலீசாருடன், ராஜாமணியும் கோவாவுக்கு நேற்று முன்தினம் இரவு 8.20 மணியளவில் மங்களூர் மெயிலில் சென்றார். ரயில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எஸ்.ஐ ராஜாமணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது துப்பாக்கியை ஆய்வாளரிடம் ஒப்படைத்துவிட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சேலம் ரயில் நிலையத்தில் இறங்கி ஆலப்புழா எக்ஸ்பிரசில் சென்னைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை  மோசமானதால் ரயிலில் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

ரயில் நேற்று காலை 6.15 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும், நடைமேடை 3ல் நின்று கொண்டிருந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ்க்கு சென்று ரயில்வே போலீசார் எஸ்.ஐயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: