வேலூர் கலெக்டரின் காரை ஜப்தி செய்ய வந்த அமீனாக்கள்

வேலூர்: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக 2003ல் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்திற்கு ₹42 லட்சம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாம். இந்த தொகை போதாது என நில உரிமையாளர்கள் வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 2017ல் வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த நிலத்திற்கு ₹4.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் இந்த தொகையை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்தது. இந்நிலையில் நேற்று வேலூர் கோர்ட் அமீனாக்கள் கலெக்டர்  அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அங்கு கலெக்டர் மற்றும் டிஆர்ஓ கார்கள் இல்லை. இதனால் அவர்கள் திரும்பி சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘நிலம் கையகப்படுத்தியதற்கான நிவாரணத்தை கோர்ட் தீர்ப்பு மூலம்  பெறுவதற்காக கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய 3வது முறையாக வந்துள்ளோம்.  ஊழியர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். அடுத்த முறை போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி செய்வோம்’ என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.

Related Stories: