மும்பை: மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகிறது. மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும், தமிழகம் உட்பட 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலும், 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும், பாஜ-சிவசேனா ஒரு அணியாகவும், நவநிர்மான் சேனா, வஞ்சித்பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் போட்டியிட்டன. இத்தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. அரியானாவில் ஆளும் பாஜ.வுக்கு எதிராக காங்கிரஸ், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்டுள்ளது. இதுதவிர, இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. இம்மாநிலத்தில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.