கொல்கத்தா: ‘மேற்கு வங்க ஆளுநரின் பாதுகாப்பை சிஆர்பிஎப்.பிடம் ஒப்படைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்க கவர்னராக ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 30ம் தேதி பொறுப்பேற்றார். அவரது பாதுகாப்பை மாநில அரசு நியமிக்கும் போலீசாரே ஏற்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 15ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், `ஆளுநர் தன்கரின் பாதுகாப்பு, மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎப்) படையிடம் ஒப்படைக்கப்படும்,’ என அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘ஆளுநரின் பாதுகாப்பை சிஆர்பிஎப்.பிடம் ஒப்படைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இந்த முடிவை எடுக்கும் முன்பு மாநில அரசிடம் ஆலோசனை நடத்தாதது ஏன்? மாநில அரசியலமைப்பின் தலைவர் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பு அளிப்பது மாநில அரசின் கடமையாகும். அவருக்கு மாநில அரசு `இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில், மாநில அரசை ஆலோசிக்காமல் திடீரென அதை சிஆர்பிஎப்.பிடம் ஒப்படைத்தது ஏன்? என விளக்கம் அளிக்க வேண்டும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.