சென்னை: தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்து இன்று முதல் 26ம் தேதி வரை 4,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்-26, தாம்பரம் சானடோரியத்தில்-2, பூந்தமல்லி-1, மாதவரம் பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு ஆக மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள் அமைக்கப்படும். இந்த சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள் இன்று (24ம் தேதி) முதல் செயல்படும்.