20 கோடி வெளிநாட்டு பணம் சட்ட விரோதமாக பதுக்கல் கல்கி மீது அமலாக்கத்துறை வழக்கு?

* பல ஆயிரம் கோடி சொத்து குவிப்பு குறித்தும் விசாரிக்க முடிவு

சென்னை: கல்கி ஆசிரமங்களில் நடந்த சோதனையில் 20 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் குவிக்கப்பட்டதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் பதுக்கியதாக கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்துக்கு தமிழகம், கர்நாடகா என நாடு முழுவதும் கிளைகள் உள்ளது. கல்கி பகவான் என்னும் விஜயகுமாரை பார்க்க வரும் பக்தர்கள் 5 அயிரம் முதல் 50 ஆயிரம் வரை தட்சணையாக அளிக்க வேண்டும். இதற்கு முன்கூட்டியே பணத்தை கட்டி பதிவு செய்ய வேண்டும். வெளிநாட்டு பக்தர்கள் அதிகம் என்பதால் நன்கொடை என்ற பெயரில் பணம் கொட்டியது. இந்த பணத்தை கல்கி பகவான் தனது மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மருமகள் பிரீத்தா ஆகியோர் பெயரில் ரியல் எஸ்டேட் என பல தொழில் நிறுவனங்கள் தொடங்கி முதலீடுகள் செய்துள்ளனர். மேலும், கல்கி ஆசிரமத்திற்கு வரும் நன்கொடை பணத்தை வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து கடந்த 16ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் 500 பேர் ஒரே நேரத்தில் தனித்தனி குழுக்களாக பிரிந்து கல்கி ஆசிரமங்களுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் மகன் கிருஷ்ணா நடத்தி வரும் நிறுவனங்கள் தமிழகம், கர்நாடகா என நாடு முழுவதும் 40 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.5 நாட்கள் நடந்த தொடர் சோதனையில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக 45 கோடி பணம் மற்றும் 20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் 90 கிலோ தங்கம், வைர நகைகள் என மொத்தம் 100 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான மொத்தம் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் சட்ட விரோதமாக வாங்கிய ஆவணங்களும் சிக்கியது. இதுதவிர ஆப்பிரிக்கா, துபாய், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் 100 கோடிக்கும் மேல் முதலீடுகள் செய்து இருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. 40 இடங்களிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் கணக்காய்வு செய்த போது 800 கோடிக்கு மேல் மத்திய அரசுக்கு வரிஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின் போது கல்கி பகவான் மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மருமகள் பிரீத்தா ஆகியோரிடம் விசாரணை நடத்திய போது ஒத்துழைப்பு அளிக்காமல் மவுனமாக இருந்தனர். உடனே வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளித்தனர். ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

எனவே வருமான வரித்துறை சார்பில் நேரில் ஆஜராகாதது குறித்து விளக்கம் கேட்டு மீண்டும் இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சட்ட விரோதமாக ₹20 கோடி மதிப்புள்ள அமெரிக்கா டாலர், சிங்கப்பூர் பணம், அரபு நாட்டு பணம், சீனா நட்டு பணம் என வெளிநாட்டு பணம் கட்டுக்கட்டாக சோதனையில் கிடைத்தது. மேலும், சட்ட விரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கல்கி சாமியார் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், அமலாக்கத்துறை அதிகாரிகள் கல்வி ஆசிரம நிறுவனர் கல்கி பகவான் என்றும் விஜயகுமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். கல்கி ஆசிரமத்தில் அவர்கள் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: