சென்னை: தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் நவ.18ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் கூட்டத்தொடரில் கொண்டுவரவுள்ள நலத்திட்டங்கள், சட்டத்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதே சமயம் பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தலா ரூ.325 கோடியில் அமைக்க மற்றும் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு தலா ரூ.195 கோடியும், மாநில அரசு தலா ரூ.130 கோடியும் வழங்குகிறது. 6 புதிய மருத்துவ கல்லூரிகளால் தமிழகத்திற்கு கூடுதலாக 900 எம்பிபிஎஸ் சீட்கள் கிடைக்கும். 900 இடங்களில் 85% தமிழக மாணவர்களுக்கும் 15% பிற மாநிலத்தவர்களுக்கும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பழனிசாமி கடிதம்: தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.