திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் மாடுகள் தங்குவதால், அங்கு துர்நாற்றம் வீசி வருவதோடு, கொசுக்கள் உற்பத்தியாவதால் மாணவர்களுக்கு டெங்கு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் கிராமத்தில், தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. தொடக்கப் பள்ளியில் 60 மாணவர்களும், அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகளும் படிக்கின்றனர்.
இந்நிலையில், இரு கட்டிடங்களுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் பள்ளி வாகத்திற்குள் புகுந்து, வராண்டாவில் தங்குகின்றன. இந்த மாடுகள் அங்கேயே சாணத்தையும் போட்டுவிட்டு செல்கிறது. மறுநாள் காலை பள்ளிக்கு வரும் மாணவர்கள், அவற்றை சுத்தம் செய்யும் அவலநிலை உள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி மாணவர்களுக்கு டெங்கு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.