மத ரீதியான மாணவர்களை ஒருங்கிணைக்கக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பவில்லை...அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறை அனுப்பியதாக வெளியான சுற்றறிக்கையில், பள்ளி மற்றும் கல்லூரி அளவில் இந்து இளைஞர் முன்னணி மற்றும் இந்து மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் மாணவர்களை மதரீதியாக திரட்ட  முயல்வதாகவும் ஒழுக்கக் கல்வி, பக்தி, புராணம், இதிகாசம் போன்றவற்றை போதிப்பது போல் மாணவர்களை சித்தாந்த ரீதியாக திரட்டி வருவதும் அரசின் கவனத்துக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதுபோல், கல்லூரிகளில் 10 பேர் கொண்ட குழுக்களாக இந்து மாணவர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் பணியில் இந்து இளைஞர் முன்னணி ஈடுபட்டிருப்பதாகவும் அக்குழு லவ் ஜிகாத் போன்ற மாற்று மதத்தினர் இந்து பெண்களை  காதலிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாகவும் புகார் வந்துள்ளது. மதம், சித்தாந்தம் அடிப்படையில் மாணவர்கள் ஒன்று சேர்வதை கண்காணிக்குமாறும் மாணவர்களை மதரீதியில் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை தடுக்க  வேண்டும் என்றும் உடனடியாக இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக அனுப்பவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக மாநாடு கூடத்தில், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் மற்றும் செயலர்களோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அரசு  வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு இருப்பது போல், தனியார் துறையிலும் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய  அமைச்சர், விளையாட்டு கழகங்கள் தவறான வழியில் செயல்படுவது தொடர்ந்தால் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு கலைக்கப்படும் என எச்சரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், மத ரீதியான மாணவர்களை ஒருங்கிணைக்கக் கூடாது என வெளியான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பவில்லை என்று தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் முதலமைச்சரின் ஒப்புதலின்றி அனுப்பப்படாது என்றும் தெரிவித்தார்.

Related Stories: