ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் இணைய வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அந்த மாநில மக்களுக்கு இந்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. தெற்கு ஆசியாவில் மனித உரிமைகள் என்ற பெயரில் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் துணைக்குழு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் 3 முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது குறித்து அக்குழு கவலை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் லஷ்கர் -இ - தொய்பா, ஜெய்ஷ் - இ- முகமது ஆகிய பயங்கரவாத இயக்கங்களை பாகிஸ்தான் ஆதரித்து வருவதை அக்குழு கண்டித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த கருத்தை இந்தியாவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியதற்கு ஆதரவு அளித்தாலும் அங்கு இயல்பு நிலை இன்னும் திரும்பாதது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்று அமெரிக்கா தமது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய பாதுகாப்பு நிபுணர் பி.கே.சேகல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் ஊடுருவல் ஆகியவற்றை, பாகிஸ்தான் ஒரு தந்திர ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது, என்று கூறினார்.