தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 -7 மணி, மாலை 7 - 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

மாசுக்கள் அதிகரிப்பின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017ம் ஆண்டு தீபாவளி அன்று தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. அதையடுத்து நாடு முழுவதும் தடை விதிக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதற்கு மத்தியஅரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 23ந்தேதி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக்பூஷண் அமர்வு  உத்தரவிட்டது. பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 2 மணி நேரத்தை நிர்ணயித்தது அரசு

இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது:

தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகிறது. மேலும் அந்த அறிவிப்பில்,பொதுமக்கள் குறைந்த ஒலிபட்டாசுகளை வெடிக்க வேண்டும். திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்.மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: