தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு தான்; மனிதர்களுக்கு அல்ல: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

சென்னை: தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே; மனிதர்கள் நுழைவதற்கல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயிலில் தீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் அனுமதி கேட்டு திண்டுக்கல்லை சேர்ந்த தமிழரசன் என்பவர் சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளார். இவர் வெள்ளயங்கிரியில் உள்ள சுயம்புஆண்டவர் கோவிலில் பக்தராக உள்ளார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபம் மற்றும் அதனை ஒட்டிய நாட்களில் வெள்ளயங்கிரி 7வது மலையில் மகாதீபம் ஏற்றும் நடைமுறை இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இந்த நடைமுறையை பின்பற்றி வரும் நிலையில், இந்த ஆண்டு வனப்பகுதிக்குள் செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்திருப்பதாகவும், அவர்கள் அனுமதி வழங்காவிட்டால் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருப்பதாவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதை தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து இந்த வழக்கினை பொதுநல வழக்காக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். இந்த வழக்கில் டிசம்பர் 10 முதல் 12 வரையுள்ள நாட்களில் மகாதீபம் ஏற்றுவதற்கும், வழிபடுவதற்கும் அனுமதி கோரியிருந்தார். இந்நிலையில் வழக்கானது நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஷேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்குத்தான் என்றும் மனிதர்களுக்கு இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும் மனு மீது தமிழக அரசு, வனத்துறை, அறநிலையத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கை அடுத்த மாதம் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: