ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு

கடந்த 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவர் மீதும் சிபிஐ.யும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன்

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர் சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு,  உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று  ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு

இதனிடையே சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரத்தால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது. எனவே, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது   7 நாள் காவலில் தனது அலுவலகத்தில் வைத்து ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறை காவல் 24ல் முடியும் நிலையில், அன்றைய தினம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்க உள்ளது.

Related Stories: