நாடாளுமன்ற தேர்தலில் கனடாவின் கிங்மேக்கரான இந்தியர்: ட்ரூடோ ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறார்

ஒட்டாவா: கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. இதனால், 24 இடங்களை வென்ற புதிய ஜனநாயக கட்சித் தலைவரும். கனடா வாழ் இந்தியருமான  ஜக்மீத் சிங் ‘கிங்மேக்கர்’ ஆகி உள்ளார். இவரது ஆதரவுடன், ட்ரூடோ ஆட்சி அமைக்க உள்ளார். கனடாவில் 338 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடந்தது. மொத்தம் 2.74 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் பதிவான வாக்குகள் ேநற்று எண்ணப்பட்டன. இதில், தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான ஆன்ட்ரு ஷீரின் கன்சர்வேட்டிங் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. இதில், லிபரல் கட்சி  அதிகபட்சமாக 157 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. மற்ற கட்சிகளான பிளாக் கியூபெகோயிஸ் 32 இடங்களையும், கனடா வாழ் இந்தியர் ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 24 இடங்களையும், கிரீன் கட்சி 3, சுயேச்சை ஒரு இடங்களையும் வென்றுள்ளன.

அதிக இடங்களை கைப்பற்றியதால், ட்ரூடோ தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார். ஆனாலும் அவரது அரசு, பலவீனமான மைனாரிட்டியாகவே இருக்கும். ட்ரூடோ பெரும்பான்மையை எட்ட குறைந்தபட்சம் 13 எம்பி.க்கள் வேண்டும். பிளாக் கியூபெகோயிஸ் கட்சி, ட்ரூடோவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறி உள்ளது. எனவே, கனடா அரசியலில் இந்தியரான ஜக்மீத் சிங் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். அவரது ஆதரவுடன் ட்ரூடோ தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார். கடந்த 2015ல் தாமஸ் முல்கயர் தலைமையில் களமிறங்கிய புதிய ஜனநாயக கட்சி 44 இடங்களை வென்று 3வது பெரிய கட்சியாக இருந்தது. ஆனால், இம்முறை பாதிக்கு பாதி இடங்களை இழந்த போதிலும், லிபரல் கட்சியின் தடுமாற்றத்தால், புதிய ஜனநாயக கட்சி கனடா அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. முன்னாள் பள்ளி ஆசிரியரான ட்ரூடோ(47), கடந்த 4 ஆண்டு கால அரசியலில் செல்வாக்குமிக்க தலைவராக திகழ்ந்தார்.

இஸ்ரேலில் ஆட்சி அமைக்க முடியாமல் நெதன்யாகு விலகல்

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறார். கடந்த ஏப்ரலில் இவரது ஆட்சிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 120 இடங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், நெதன்யாகுவின் லிகுட் கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவைப்படும் நிலையில் கூட்டணி ஆட்சி அமைத்தார். ஆனால், கூட்டணி கட்சி திடீரென ஆதரவை வாபஸ் பெற்றதால், அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், 5 மாதத்தில் 2வது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் லிகுட் கட்சி 32, பென்னி கன்ட்ஸின் புளூ அன்ட் ஒயிட் கட்சி 33 இடங்களையும் கைப்பற்றின. முதலில், நெதன்யாகு ஆட்சி அமைக்க 28 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் அவரால் உதிரிக்கட்சிகளின் ஆதரவை பெற முடியவில்லை. இதனால், ஆட்சி அமைப்பதில் இருந்து விலகுவதாக நெதன்யாகு அறிவித்துள்ளார். இதனால், தற்போது கன்ட்ஸுக்கு ஆட்சி அமைக்க 28 நாள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

Related Stories: