அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை தீபாவளி போனஸ்

கரூர்: போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை (வியாழன்) தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளது. இதற்காக ₹206.52 கோடி  நிதியை முதல்வர் அனுமதித்துள்ளார். நாளை (24ம்தேதி) தீபாவளி போனஸ் வழங்கப்படும். மேலும் தீபாவளி முன்பணமாக ₹10,000 வரை வழங்கும் பணி இன்று (23ம்தேதி) முதல் தொடங்க இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்க ரெகுலராக இயக்கப்படும் பேருந்து உடன் சேர்த்து 21,586 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்காக போக்குவரத்து துறை தயார் நிலையில் உள்ளது.

குறைந்த தூரம் செல்லக்கூடிய குளுகுளு வசதி கொண்ட பேருந்துகள் 8 போக்குவரத்து கழகங்களிலும் விரைவில் இயக்கப்படும். தற்போது கூண்டு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பதிவு செய்த பிறகு படிப்படியாக 150 பேருந்துகள் கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் ஏசி கட்டணத்துடன் விரைவு பேருந்துகளில் உள்ள வசதியைபோல சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் இயக்கப்பட இருக்கிறது தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்து புகார் அளிக்க டோல் ஃப்ரீ தொலைபேசி எண் தெரிவிக்கப்படும். அதில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: