ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம் ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலின்போது செய்யப்பட்ட பணப்பட்டுவாடா புகார்  தொடர்பாக எடுக்கப்பட்ட  நடவடிக்கையை சீலிடப்பட்ட கவரில் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.ஜெயலலிதா இறப்புக்கு பின்பு, கடந்த 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதில் போட்டியிட்ட டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது.  இதனையடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில் யார் பெயரையும் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சிபிஐ.க்கு மாற்ற கோரி வழக்கறிஞர் வைரக்கண்ணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல, பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய  விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுகவை சேர்ந்த மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நேற்று நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சீலிட்ட  கவரில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது. ஆணைய நடவடிக்கைகளை வாய்மொழியாக தெரிவிக்க விரும்பாததால் கவரில் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.இதனையடுத்து, நீதிபதிகள், இந்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி,  வழக்கை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதேபோல, ஏற்கனவே தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வைரக்கண்ணன் தொடர்ந்த வழக்கும் மற்ற  வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: