புதுடெல்லி: மிகவும் அதிக அளவில் விற்கப்படும் சாதாரண பொருட்கள் விற்பனை கூட கிராமங்களில் மிகவும் மந்தமாகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இருந்ததைவிட குறைந்துள்ளது. பிரபல ஆய்வு நிறுவனம் நீல்சன் வெளியிட்ட அறிக்கை வருமாறு: டீ தூள் பாக்கெட் முதல் டூத்பேஸ்ட் வரையில் அனைத்து நுகர்பொருள்கள் விற்பனை கிராமங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த காலாண்டில் 5 சதவீதம் குறைந்துள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் குறைந்துள்ளது என்பது கவலை அளிக்கக் கூடிய நிலை ஆகும். நுகர்பொருள் விற்பனை விரிவாக்கமும் முதல் முறையாக நகரங்களை விட கிராமங்களில் குறைந்துள்ளது. கடந்த 2018 ம் ஆண்டு இதே காலாண்டில் நுகர்பொருள் விற்பனை எந்த அளவு இருந்ததோ அதைவிட தற்போது 7.3 சதவீதம் குறைந்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதனால் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.