7 ஆண்டு இல்லாத வகையில் டீத்தூள் முதல் பேஸ்ட் வரை கிராமங்களில் விற்பனை சரிவு : நீல்சன் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: மிகவும் அதிக அளவில் விற்கப்படும் சாதாரண பொருட்கள் விற்பனை  கூட கிராமங்களில் மிகவும் மந்தமாகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இருந்ததைவிட  குறைந்துள்ளது. பிரபல ஆய்வு நிறுவனம் நீல்சன் வெளியிட்ட அறிக்கை வருமாறு: டீ தூள் பாக்கெட் முதல் டூத்பேஸ்ட் வரையில் அனைத்து நுகர்பொருள்கள் விற்பனை கிராமங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த காலாண்டில் 5 சதவீதம் குறைந்துள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் குறைந்துள்ளது என்பது கவலை அளிக்கக் கூடிய நிலை ஆகும். நுகர்பொருள் விற்பனை விரிவாக்கமும் முதல் முறையாக நகரங்களை விட கிராமங்களில் குறைந்துள்ளது. கடந்த 2018 ம் ஆண்டு இதே காலாண்டில் நுகர்பொருள் விற்பனை எந்த அளவு இருந்ததோ அதைவிட தற்போது 7.3 சதவீதம் குறைந்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதனால் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஏற்ெகனவே வாகனங்கள் விற்பனை குறைந்ததால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், ஏராளமான தற்காலிக தொழிலாளர்கள், நிரந்தர பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுபோல், நுகர்பொருள் விற்பனைத் தொழிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அதற்கான அறிகுறி தெரியவில்லை என்று இந்துஸ்தான் யுனிலிவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பொருளாதார மந்த நிலையின் தாக்கம் நாட்டின் வடமாநிலங்களில் பெரிதும் காணப்படுகிறது. போதிய வேலைவாய்ப்பு இல்லாத நிலை மற்றும் வருவாய் குறைவு ஆகியவையால் கிராமங்களில் நுகர்பொருள் விற்பனை என்பது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: