பொதுமக்களின் நலன்கருதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த வங்கி திறக்கப்படுமா?

இளையான்குடி: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த வங்கி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சாலை விபத்து உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு உயிரிழப்புகள் நடந்துள்ளது. அவசர சிகிச்சைக்கு ஏற்ற வகையில், பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் ஏற்ற முடியாத காரணத்தால் பலியானதே அதிகம். மாவட்டத்தில்  மருத்துவகல்லூரி மருத்துவமனை 1, அரசு மருத்துவமனைகள் 18, கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 35, மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 இயங்கி வருகிறது. இதில் சிவகங்கை அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறு எங்கும் ரத்த வங்கி இல்லை.  

மாவட்டத்தில் கிராம பகுதிகளில் காயம்பட்டு வரும் நபர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிராமங்களில் ஏற்படும் விபத்து சம்பவங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே முதலில்  சிகிச்சை பெற கொண்டு செல்கின்றனர். ஆனால் ரத்த போக்கு மற்றும் அவசர சிகிச்சைக்கு தேவையான ரத்த இருப்பு இல்லாததால் சிவகங்கை, காரைக்குடி மற்றும் மதுரை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால்  நோயாளிகள் வரும் வழியிலேயே இறக்க நேரிடுகிறது. சிவகங்கை மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த வங்கி செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  கோருகின்றனர்.  

இது குறித்து சமூக ஆர்வலர் வில்லியம் கூறுகையில்,‘‘தற்போது தமிழகத்தை டெங்கு உள்ளிட்ட நோய்கள் மிரட்டி வருகிறது. ரத்த வங்கி இல்லாததால் விலை மதிப்பில்லாத உயிர்கள் பறிபோகும் நிலை தொடர்கிறது. ஆரம்ப கட்டத்தில்  உயிர்களை காப்பாற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த வங்கிகள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

Related Stories: