சீன பட்டாசுகளை கடத்தி வந்தாலோ, விற்பனை செய்தாலோ தண்டனைக்குரிய குற்றம் என சுங்கத்துறை அறிக்கை : சீனப் பட்டாசுகளை வாங்குவதை தவிர்க்கவும் வேண்டுகோள்

டெல்லி : சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று சுங்கத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீன பட்டாசுகளுக்கு மத்திய அரசு தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீதிகள் தோறும், பட்டாசு கடைகள் புற்றீசல்போல் முளைப்பது வழக்கம். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், சராசரி மனிதனின் கேட்கும் திறனுக்கு தகுந்தது. சீன பட்டாசுகளில் 125 டெசிபலுக்கு கூடுதலாக சப்தம் கேட்கும். அதில், எளிதில் தீப்பற்றும் பொட்டாசியம் குளோரைடு அதிகம் சேர்க்கப்படுகிறது.இது அதிக சப்தம், கூடுதல் வர்ணங்களை வெளிப்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால், சீன பட்டாசுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. எனவே, இந்த தீபாவளி பண்டிகைக்கு சீன பட்டாசுகள் விற்பனையை கண்காணித்து, தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னதாக மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை அறிக்கை

இந்நிலையில், சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதோ, விற்பதோ, பயன்படுத்துவதோ சுங்கத்துறை சட்டம் 1962ன் கீழ் குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனப் பட்டாசுகளில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் உள்ளன.  சீனப் பட்டாசுகளை பயன்படுத்துவது வெடிபொருள் சட்டத்திற்கு எதிரானது. சீனப் பட்டாசுகளை வாங்குவது உள்நாட்டு தொழில் மற்றும் வணிகத்துறை பாதிக்கும். அவ்வாறு விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சீனப் பட்டாசுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். சீனப் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டால் 044-25246800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்று சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: