சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் பெய்து வரும் பருவமழை காரணமாக டெங்கு மற்றும் வைரல் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 500க்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய பின் பேசிய அவர்; தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் சிலர் உயிரிழந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், ஆண்கள், என 2000 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திமுக நிர்வாகிகள் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் அண்ணா நூலகத்தை பார்வையிட்டேன்; நானும் அந்த நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துள்ளேன். அண்ணா நூற்றாண்டு நினைவகத்தை அரசு சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.