உயர்நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் சமூக வலைத்தளம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்!

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வரும் சமூக வலைத்தளம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பல மாநில உயர்நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் மூலமாக போலிச்  செய்திகள், ஆபாச தகவல்கள் மற்றும் படங்கள், தீவிரவாத தகவல்கள் போன்றவை பரப்பப்படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கிரிமினல் வழக்குகளில், சர்ச்சைக்குரிய தகவல்களை யார் அனுப்பியது என்ற விவரத்தை தெரிவிக்கும்படி சமூக இணையதள நிறுவனங்களிடம், போலீசார் கேட்டு வருகின்றனர்.  ஆனால், தனிநபர் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த விபரங்களை சமூக இணையதள நிறுவனங்கள் வழங்குவது இல்லை.

இதனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சமூக இணையதளங்களுடன் அவற்றை பயன்படுத்துவோரின் ஆதார் எண்களை இணைக்கக் கோரி தமிழகம் உட்பட பல மாநில அரசுகள், சமூக இணையதள நிறுவனங்கள் மீது உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளன. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இவற்றை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி பேஸ்புக் நிறுவனம் மனு செய்தது. அதில், ‘இந்த வழக்குகளில் பல உயர் நீதிமன்றங்கள்  முரண்பாடான கருத்துக்களை தெரிவிக்கின்றன. இதில் ஒருமித்த கருத்து ஏற்பட இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்தால் நன்றாக இருக்கும்,’ என கூறியிருந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூக வலைத்தளம் தொடர்பாக நடக்கும் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம்.

ஆனால், உத்தரவு ஏதும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவித்திருந்தது. மேலும், சமூக வலைத்தள கணக்குகளை முறைப்படுத்த மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை விதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை 3 வாரத்திற்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்கள் தனிமனித சுதந்திரத்தை மீறும் விதமாக இருக்கிறதா என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சமூக வலைத்தளங்கள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதள கணக்குகளை நெறிமுறைபடுத்த மத்திய அரசுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: