கன்னியாகுமரி: மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் புகுந்து பிரபல ஹோட்டல், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். அந்த சம்பவத்துக்கு பின்னர் நாட்டின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர மாவட்டங்களில் மாதந்தோறும் சஜாக் ஆப்பரேஷன் என்ற சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று சஜாக் ஆபரேஷன் நடந்தது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 மீனவ கிராமங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அதிவிரைவு ரோந்து படகு மூலம் கூடங்குளம் அணு உலை பின்புறம் முதல் நீரோடி வரை கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடலில் மீன் பிடிக்கும் படகுகள் சோதனையிடப்பட்டன. கடல் வழியாக புதிய படகுகள் அல்லது மீன்பிடி படகுகளில் புதிய நபர்கள் யாராவது வருகிறார்களா என சோதனை நடத்தினர். மேலும் மீனவ கிராமங்களில் புதிய நபர்கள் யாராவது வந்தால் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். சின்னமுட்டம், மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம், தேங்காப்பட்டணம், குளச்சல் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் முடுக்கிவிடப்பட்டு தீவிர கண்கணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.