உள்ளாட்சி அமைப்புகளின் 484 சாலைகளை மேம்படுத்தி புனரமைக்க ரூ.895 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணையில், 27 மாவட்டங்களில் உள்ள 484 சாலைகளை விரிவாக்கம் செய்யவும், புனரமைக்கவும் ரூ. 895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொத்தம் 1267 கி.மீ., தூரத்திற்கு சாலைகளை சீர்செய்ய இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்படும் கிராமச் சாலைகள்!

தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 66 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் தேசிய, மாநில, மாவட்ட முக்கிய, மாவட்ட இதர சாலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையிலும், மாநகர, நகர்ப்புற பகுதிகளில் ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் உள்ள சாலைகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் அந்த சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3 ஆயிரம் ஊராட்சி சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டில் 524 பஞ்சாயத்து யூனியன்களுக்கு உட்பட்ட 1362 கி.மீ நீளம் கொண்ட சாலை மாவட்ட இதர சாலைகளாக 1024 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 27 மாவட்டங்களில் மொத்தம் 1267 கி.மீ., தூரத்திற்கு சாலைகளை சீர்செய்ய நிதி ஒதுக்கீடு

அதன்படி தற்போது 484 பஞ்சாயத்து யூனியன்களுக்கு உட்பட 1267 கி.மீ நீள சாலைகள் 895.48 கோடி தரம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் 41 கோடியில் 23 சாலைகள், திருவள்ளூரில் 30 கோடியில் 15 சாலைகள், கடலூரில் 23 கோடியில் 12 சாலைகள், திருவண்ணாமலையில்  38 கோடியில் 17 சாலைகள், சேலத்தில் 48 கோடியில்  36 சாலைகள், தர்மபுரியில் 53 கோடியில் 33 சாலைகள், ஈரோட்டில் 52 கோடி செலவில் 25 சாலைகள், கோவையில் 59 கோடியில் 21 சாலைகள் புதுக்கோட்டையில் 52 கோடியில் 25 சாலைகள், தஞ்சாவூரில் 36 கோடியில் 25 சாலைகள், நாகை 48 கோடியில் 20 சாலைகள், மதுரையில் 33 கோடியில் 27 சாலைகள், ராமநாதபுரத்தில் 56 கோடியில் 29 சாலைகள், விருதுநகரில் 28 கோடியில் 23 சாலைகள், சிவகங்கையில் 62 கோடியில் 39 சாலைகள் என மொத்தம் 27 மாவட்டங்களில் 895 கோடியில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு அடுத்த ஆண்டு முதல் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுகிறது. தற்போது, நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவு தலைமை பொறியாளரின் கீழ் நான்கு வட்டங்கள் மற்றும் 14 கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: