சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.29,176 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ..3,647-க்கு விற்பனை செய்யப்படுகிறது அதே நேரம் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.49.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.
கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், இந்தியாவில் நடப்பாண்டில் தங்கத்தின் தேவை குறைவாகவே நீடிக்கும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், தங்கம் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அதை வாங்குவதில் தேக்கநிலை தொடரும் என கூறப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு 50 முதல் 800 டன் அளவிற்கே இருக்கும் என உலக தங்க கவுன்சில் ஏற்கெனவே கணித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 761 டன் அளவிற்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.