3வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று தென்னாப்ரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி

ராஞ்சி:3வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று தென்னாப்ரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. ராஞ்சியில் நடந்த கடைசிடெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா அணி. இதன் மூலம் தென்னாப்ரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர்

ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ரோகித் ஷர்மா 212, அஜிங்க்யா ரகானே 115, ஜடேஜா 51, சாஹா 24, உமேஷ் 31 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்திருந்தது. ஜுபேர் ஹம்சா (0), கேப்டன் டு பிளெஸ்ஸி 1 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். டு பிளெஸ்ஸி மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் உமேஷ் வேகத்தில் கிளீன் போல்டானார். ஹம்சா - தெம்பா பவுமா இணை 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 91 ரன் சேர்த்தது.

 தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்

ஹம்சா 62 ரன் (79 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), பவுமா 32 ரன் (72 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். ஓரளவு தாக்குப்பிடித்த ஜார்ஜ் லிண்டே 37 ரன் (81 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (56.2 ஓவர்). என்ஜிடி (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் உமேஷ் 3, ஷமி, நதீம், ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 பாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 133 ரன்களில் ஆட்டமிழந்தது

இதையடுத்து, 335 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது.  நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த தென்னாப்பிரிக்கா அணி, இன்று மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் அடுத்தடுத்த 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களில் ஆட்டமிழந்தது.

அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்களை இந்திய பந்துவீச்சாளர் நதீம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி

பெற்று 3-0 என்ற புள்ளி கணக்கில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: