×

கள்ளத்தொடர்பால் விபரீதம்,..ரவுடியை காரில் கடத்தி தலை துண்டித்து கொலை: கள்ளக்காதலி உள்பட 5 பேர் கைது

அம்பத்தூர்: சென்னை ரெட்டேரி விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (எ) கிரைம் சுரேஷ் (31), ஆட்டோ டிரைவர். இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் கொரட்டூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவரது மனைவி வினோதினி. தம்பதிக்கு, ஒரு மகள் உள்ளார். இவர்களுடன், சுரேஷின் தாய் கலா வசித்து வந்தார். கடந்த 14ம் தேதி வேலைக்கு சென்ற சுரேஷ், வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 18ம் தேதி தாய் கலா இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், கள்ளக்காதல் விவகாரத்தில் சுரேஷ் காரில் கடத்தப்பட்டு, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதும், சடலம் செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் பகுதி முட்புதரில் வீசப்பட்டதும் தெரிந்தது. இதுதொடர்பாக தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் சூபர்வைசராக பணிபுரியும் பாடி, கலைவாணர் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த ஜெயக்கொடி (34), அவரது மனைவி கார்த்திகா (31) மற்றும் வெல்டர்களான புழல், காவாங்கரை, திருமலை நகரை சார்ந்த ராஜா (29), கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சார்ந்த சுந்தரகண்டன் (21) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்தனர். விசாரணையில், ஜெயக்கொடி மனைவி கார்த்திகா பாடி, குமரன் நகர் நகர் டாஸ்மாக் கடை அருகே டிபன் கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடைக்கு கிரைம் சுரேஷ் அடிக்கடி வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். அப்போது, இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

சுரேஷ் அடிக்கடி கார்த்திகா வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். சமீப காலமாக கார்த்திகா, சுரேஷுடன் உள்ள தொடர்பை துண்டிக்க முயன்றுள்ளார். அதற்கு சுரேஷ் சம்மதிக்கவில்லை என  கூறப்படுகிறது. மேலும், அவர் அடிக்கடி கார்த்திகா டிபன் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, கடந்த 14ம் தேதி சுரேஷ் மீண்டும் கார்த்திகா கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற சுரேஷ், கார்த்திகாவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், அவர் முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் சுரேஷ், கார்த்திகாவை சரமாரி தாக்கி, ‘‘இனிமேல் உன்னை நிம்மதியாக வாழ விட மாட்டேன்,’’ என கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் ஜெயக்கொடியிடம், ‘‘சுரேஷ் என்பவன் கடை நடத்த விடாமல் என்னிடம் தகராறு செய்கிறான்.

தட்டிக்கேட்டதற்கு உன்னையும், உன் கணவனையும் கொன்று விடுவேன்,’’ என மிரட்டுவதாக கார்த்திகா கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஜெயக்கொடி, சுரேசுக்கு போன் செய்து, ‘‘உன்னிடம் பேச வேண்டும் வா,’’ என ஒரு அழைத்துள்ளார். அதன்படி அங்கு சென்ற சுரேஷை, ஜெயக்கொடி தனது நண்பர்களான ராஜா, சுந்தரகண்டன் ஆகியோருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி, ஒரு காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் பகுதிக்கு சென்ற அவர்கள், காரில் இருந்து சுரேஷை இறங்கி தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். பின்னர்,  அங்குள்ள முட்புதரில் தலை, உடல் பகுதியை தனித்தனியாக வீசிவிட்டு வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கிடந்த சுரேஷ்  உடலை கைப்பற்றினர். ஆனால், தலை கிடைக்கவில்லை. இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 தொடர்ந்து, நேற்று காலை போலீசார் சுேரஷின் தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், புள்ளிலைன், தனியார் கல்லூரி அருகில் தலையை கண்டெடுத்தனர். இதனையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர், கார்த்திகா, அவரது கணவர் ஜெயக்கொடி, ராஜா, சுந்தரகண்டன் மற்றும் கார் கொடுத்து உதவிய பாடி, கலைவாணர் நகரை சேர்ந்த மணிவண்ணன் (28) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளத்தொடர்பால் ரவுடி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கொரட்டூர் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Rowdy ,disaster ,kallakkatali , 5 arrested for counterfeiting, murder, forgery
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...