தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவன் இர்பான் உள்பட 8 பேரின் ஜாமீன் மனு விசாரணையை தேனி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல், வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த இர்பான், தர்மபுரியை சேர்ந்த பிரியங்கா மற்றும் இவர்களது பெற்றோர் உட்பட 10 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாணவன் இர்பான், அவரது தந்தை முகமதுசபி, மாணவன் ராகுல், அவரது தந்தை டேவிட், மாணவன் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோர் ஜாமீன் கோரி தேனி மாவட்ட முதன்மை ெசஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் நேற்று வந்தது.சிபிசிஐடி போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால் விசாரணையை ஒத்திவைக்க வலியுறுத்தப்பட்டது. இதனையேற்ற நீதிபதி விஜயா, ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.