கடும் எதிர்ப்பு எதிரொலி குரூப்-2 பாடத்திட்டம் மீண்டும் மாற்றம்

* டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு * தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு

சென்னை: கடும் எதிர்ப்புக்கு பிறகு குரூப்-2 பணிக்கான பாடத்திட்டத்தை மாற்றி டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை:  அரசுப்பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 27ம் தேதி குரூப்- 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது. இரண்டு தொகுதி தேர்வுகளுக்கும் முதனிலைத்  தேர்வும், முதன்மை எழுத்துத் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது. மிக முக்கியமாக தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழி அறிவுத்திறன், கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று  தமிழக அரசு செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள்  வைக்கப்பட்டன.  அதனடிப்படையில் தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் சில மாற்றங்கள் தேவை என  கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையினப் பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தில் கீழ்கண்ட மாற்றங்களைச் செய்துள்ளது.

 முதனிலைத்தேர்வுக்கு ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. இருப்பினும் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக  அரசியல் இயக்கங்கள்,  தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். தேர்வர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார் படுத்திக்  கொள்வதற்காகவும்  முதனிலைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.  இத்தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும்.ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு, தற்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத்தேர்வின் பகுதி-அ மட்டும் தனித்தாளாக (தாள்-1),  தகுதித்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வு 100 அதிக பட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக 1.30 மணி நேரம் நடைபெறும். இத்தேர்வில் தகுதிபெற 100க்கு 25 மதிப்பெண்கள் அவசியம் பெறவேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற்றால்  மட்டுமே தாள்-2  மதிப்பீடு செய்யப்படும்.

இத்தகுதித்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்வரின் தரவரிசை நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இத்தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம்  பட்டப்படிப்பிலிருந்து பத்தாம் வகுப்பு  தரத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரிந்த மாணவர்களால் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பகுதி-அ தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் தாள் 2, தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. முன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது தற்போது 300 மதிப்பெண் கொண்ட தேர்வாக 3 மணி நேரம்  நடைபெறும். விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். முதனிலைத் தேர்விலும் முதன்மை எழுத்துத்தேர்விலும் வெற்றிபெற வேண்டுமாயின் தேர்வர்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள்,  சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது தமிழக மாணவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தை மாற்றி அறிவித்து இருந்தாலும் தமிழுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டு இருந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்குதான் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதை கருத்தில்  ெகாள்ளாமல் டிஎன்பிஎஸ்சி பத்தாம் வகுப்பு அடிப்படையில் வரலாறு, ெபாருளாதாரம் என்று கேட்கப்படுகிறது. மேலும் தாள் ஒன்று மூலம் எடுக்கப்படும் மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படாது என்பது விடைத்தாள் மாற்றியும் தமிழக மாணவர்களுக்கு பலன் தராது. இது தேவையில்லாமல் தமிழ் மொழியில் படிப்பவர்களின் நேரத்தை வீணடிக்கும்  செயலாகவே இருக்கும் என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: