வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே தம்பதி கொலை வழக்கு குற்றவாளியின் உறவினர் பெண் மாயமானதையடுத்து, கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், வீட்டை சுற்றிலும் தோண்டி பார்க்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஈசநத்தம் அருகே தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). பைனான்சியர். இவரது மனைவி வசந்தாமணி(42). இவர்கள் மகன் பாஸ்கரன் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெள்ளகோவில் அருகே உத்தாண்டகுமாரவலசுவில் உள்ள அக்கா கண்ணம்மாள்(54) வீட்டுக்கு மனைவியுடன் சென்றார் செல்வராஜ். அப்போது சொத்து தகராறு காரணமாக கண்ணம்மாள், அவரது மருமகன் நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் தம்பதியை கொன்று வீட்டு அருகில் புதைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து கண்ணம்மாள், அவரது மகள் பூங்கொடி, மருமகன் நாகேந்திரன், அவரது நண்பர் இளங்கோ ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.