×

வெள்ளகோவிலில் தம்பதி புதைக்கப்பட்ட இடத்தில் மேலும் ஒரு பெண் புதைப்பா? சுற்றிலும் தோண்டி பார்க்க திட்டம்: போலீசார் தீவிரம்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே தம்பதி கொலை வழக்கு குற்றவாளியின் உறவினர் பெண் மாயமானதையடுத்து, கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், வீட்டை சுற்றிலும் தோண்டி பார்க்கவும் போலீசார்  திட்டமிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஈசநத்தம் அருகே  தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). பைனான்சியர். இவரது மனைவி வசந்தாமணி(42). இவர்கள்  மகன் பாஸ்கரன் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெள்ளகோவில் அருகே  உத்தாண்டகுமாரவலசுவில் உள்ள அக்கா கண்ணம்மாள்(54) வீட்டுக்கு மனைவியுடன் சென்றார் செல்வராஜ். அப்போது சொத்து தகராறு காரணமாக கண்ணம்மாள், அவரது மருமகன் நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் தம்பதியை கொன்று வீட்டு அருகில் புதைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து கண்ணம்மாள், அவரது மகள்  பூங்கொடி, மருமகன் நாகேந்திரன், அவரது நண்பர் இளங்கோ ஆகியோரை  கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தனது தாய் ராஜாமணியை காணவில்லை என நாகேந்திரனின் சகோதரி நாகேஸ்வரி புகார் கொடுத்தார். இதுகுறித்து கைதான பூங்கொடி சில தகவல்களை வாக்குமூலமாக அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து கைதான 4  பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் 4 பேரிடமும் விசாரணை நடத்தவும், ராஜாமணியும் கொன்று புதைக்கப்பட்டரா? என கண்டறிய தம்பதி புதைக்கப்பட்ட வீட்டு பகுதியில் தோண்டி பார்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார்  தெரிவித்தனர். அப்பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : White Temple , couple, White Temple,girl?, police intensity
× RELATED வெள்ளகோவிலில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ்...