திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே வகுப்பறையில் மாணவர்களுடன் சினிமா பார்த்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருக்கோவிலூர் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் எட்வர்டு விக்டர் பாபு. தமிழக அரசு நவீன முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஒவ்வொரு பள்ளிக்கும் புரஜக்டர் வழங்கியது. இதன்் மூலம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த 19ம் தேதி திருக்கோவிலூர் மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன் முகையூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்துள்ளார். அப்போது சித்தேரிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளும் திறந்து கிடந்தது.
ஆனால் அங்கு மாணவர்கள் யாரும் இல்லை. ஒரு வகுப்பறை மட்டும் உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன் கதவை தட்டியுள்ளார்.அப்போது ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பிரபல நடிகரின் சினிமா படத்தை புரஜக்டரில் போட்டு பார்த்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிகாரி கோபம் அடைந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களை விசாரனை செய்துள்ளார். இதனையடுத்து அவர், சித்தேரிப்பட்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் எட்வர்டு விக்டர்பாபுவை நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். வகுப்பறையில் மாணவ மாணவிகளுடன் சினிமா பார்த்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.