சென்னை: தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி, தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. கன்னியாகுமரி, கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, தென்மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் இன்று பல இடங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, “தமிழகம் முழுவதும் தற்போது பெய்து வரும் மழைக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மழை முன்னெச்சரிக்கை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் உயர் அதிகாரிகளும், தமிழகம் முழுவதும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தொடர்பு கொண்டு, “மழை நிலவரங்கள், அணைகளின் நிலவரங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். மழை அதிகம் பெய்யும் இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். மழைக்கு முன் எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, உடனுக்குடன் தகவல்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் அலுவலக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.